Friday 28 September 2012

மோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு?

மோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு
கருப்பையில் இருந்து பாதுகாப்பாக சிசுவை வெளியே எடுக்கவேண்டிய ஒரு கைனோகாலஜிஸ்ட்,  கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி சிசுவை திரிசூலத்தில் குத்தியெடுத்து ஆனந்த நடனம் ஆடும் இரத்த வெறிப்பிடித்த கும்பலுக்கு தலைமை வகிக்கிறார். அந்த கொலைக்கார பெண்மணிக்கு மாநில மகளிர் மற்றும் சிசு நலத்துறை அமைச்சர் பதவி பரிசாக வழங்கப்படுகிறது. மாநில முதல்வரும், அமைச்சர் பரிவாரங்களும், மத வெறிப்பிடித்த அதிகாரிகளும் இணைந்து கூட்டுப் படுகொலைகளுக்கு தலைமையேற்கின்றனர். கூட்டாக நடக்கும் பாலியல் வன்புணர்வுகளை போலீசார் கண்டு ரசிக்கின்றனர். ஆதாரங்களை எல்லாம் அழிக்கின்றனர். ஆவணங்களை மறைக்கின்றனர். சாட்சிகளை கொலைச் செய்கின்றனர். பணத்தை வாரியிறைத்து தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றனர். தங்களது கரங்களால் புரிந்த கர்ண கொடூரங்களை வாய் கூசாமல் பெருமையாக பகிரங்கமாக கூறுகின்றனர்.
சிலருக்கு மேலும் 500 முஸ்லிம்களை கொலைச் செய்வது பொழுதுபோக்கு. வேறு சிலருக்கோ முஸ்லிம் இளம் பெண்கள் வேண்டுமாம். இவர்கள் அனைவரும் நரேந்திர மோடி என்ற நரமாமிச உண்ணியின் சீடர்கள். குற்றங்களை புரிந்தது மட்டுமல்ல, கொடூரங்களின் ஆதாரங்களையெல்லாம் குழி தோண்டி புதைக்கவும் தங்களது கரங்களை பரிசுத்தமாக காட்டவும் இவர்கள் தயங்கவில்லை.
நான் குஜராத்தின் சர்வாதிகாரி மட்டுமல்ல, மத்திய அரசையும் ஆட்டிவைக்கும் மோசடி வித்தைக்காரன் என கூறி என்ன பலன்?சத்தியத்திற்கும், நீதிக்கும் சில அடிப்படைகள் உள்ளன. இறைவனின் நீதியை எவராலும் தடுக்க முடியாது. தர்மம் எப்பொழுதெல்லாம் தோல்வியை சந்திக்கும் சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் மரண வியாபாரிகளுக்கு விலங்கிட சிலர் இவ்வுலகில் பிறக்கத்தான்
செய்வார்கள்.
பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார,  நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தாம் குஜராத் கூடுதல் முதன்மை நீதிபதி ஜோல்ஸ்னா யக்னிக். மற்றொருவர், முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி ஸ்ரீகுமார்.
அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை பதிவுச் செய்து பாதுகாத்த நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல்சர்மா கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார், 10 வருடங்கள் கழித்து நீதி நிலைநாட்டப்படும் என்று.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அம்பலப்படுத்த டெஹல்கா இதழ் ஆபத்பாந்தவனாக வரும் என்று  எல்லாவற்றையும் இழந்து நிற்கும் குஜராத் முஸ்லிம்களோ, பாதுகாப்பற்ற சூழலில் வாழும் இந்திய முஸ்லிம்களோ கற்பனையில் கூட எண்ணியிருக்கமாட்டார்கள்.
மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தால் விழிப்புணர்வு பெற்ற பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான தீஸ்டா ஸெடல்வாட் போன்றவர்கள் எவருக்கும் அஞ்சாமல் ஆற்றிய பணிகளை யாரும் விலைக்கொடுத்து வாங்கவில்லை. எந்தவொரு முஸ்லிம் அமைப்புகளும் செய்ய இயலாத அர்ப்பணிப்புமிக்க காரியங்களை இவர்கள் செய்து முடித்தார்கள். உயிரை பணயம் வைத்து 6 மாத காலம் டெஹல்காவுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை நேரடியாக சந்தித்து பேட்டியெடுத்து உலகிற்கு அவர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திய  ஆஷிஷ் கேதான் என்ற பத்திரிகையாளரை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
போலீஸ், அரசு, அதிகார, நீதித்துறை, பத்திரிகைத் துறைகளிலும், குடிமக்களிலும் நேர்மையை இழக்காத காவியின் காரிருளில் சிக்காதவர்கள் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியமான விஷயம் தான்.
தனது அமைச்சரவையில் பணியாற்றிய கில்லர் டாக்டரும்,  இதர அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெள்ளந்தெளிவாக வெளியான பிறகும் மோடி ராஜினாமாச் செய்வார் என கருதுவது முட்டாள்தனமாகும். இந்த கொலையாளியின் ஆட்சியை தொடர அனுமதிப்பதா ராஜதர்மம்? என்பதே மனிதநேயம் கொண்ட இந்திய குடிமக்களின் கேள்வியாகும்.
இரத்தவெறிப் பிடித்த கொலைக்காரக் கும்பல்களின் தலைவன் என்று வெட்ட வெளிச்சமான பிறகும் பயங்கரவாதி என்ன தீவிரவாதியாக கூட மோடி கருதப்படவில்லை என்பது இந்த தேசத்திற்கே வெட்க கேடாகும். மன்னர்களின் ஆட்சியில் அவர்கள் புரிந்த கொலை, கொள்ளைகளுக்கு ஆதரவாக புகழ் பாடிய அரசவை கவிஞர்களை விட கேவலமாக மோடிக்கு புகழாரம் சூட்டும் ஊடகங்கள் இருக்கும் தேசத்தில் தாம் நாம் வாழ்ந்து வருகிறோம்.
தற்போதைய நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கின் தீர்ப்பும், இதற்கு முன்பு வெளியான நீதிமன்ற தீர்ப்புகளும் மோடி பதவி விலக தாராளம் போதுமானவையாகும். ஆனால், யாரும் இத்தகையதொரு கோரிக்கையை எழுப்பவில்லை. குஜராத் மாநில மக்களோ, ஹிட்லரின் ஜெர்மனிக்கு சமமாக மோடியின் கொடூரங்களை கண்ணால் கண்டும் கூட மெளனம் சாதித்து வருகின்றனர். அவ்வளவு தூரம்
பாசிசம் பலரது உள்ளங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆகையால் மோடிக்கு எதிரான குரல் குஜராத்தில் இருந்து எழும் என கருதவேண்டாம். கேசுபாய் பட்டேலும் ஸதாஃபியாவும் மோடிக்கு எதிராக குரல் கொடுப்பதன் பின்னணி அதிகாரப் போட்டியே தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிரானது அல்ல.
விசாரணை கமிஷன்களின் கண்டுபிடிப்புகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் மத்திய அரசுக்கு நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீராக்கவும், கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கவும் போதிய காரணம் இல்லையா?
குடிமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் மெளனம் சாதிப்பது ஏன்?
மிதவாத ஹிந்துத்துவா என்ற பாராட்டைப் பெறவும், ஹிந்துத்துவா வாதிகளின் வாக்குகளைப் பெறவும் தான் மன்மோகன்சிங்கும், சோனியாவும் மெளனம் சாதிக்கின்றார்கள் போலும்!
பாராளுமன்றத்தை முடக்கி பிரதமர் மன்மோகன்சிங்கின் ராஜினாமாவைக் கோரும் பா.ஜ.கவுக்கு எவ்வளவு தூரம் காங்கிரசு கட்சி அஞ்சுகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையா?
பாப்ரி மஸ்ஜித் இடித்துத் தள்ளப்பட்ட போது காட்டிய  அதே மெளனத்தை குஜராத் இனப்படுகொலை வழக்குகளின் தீர்ப்பின் போதும் காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அளித்த தண்டனையில் பாடம் பெறாவிட்டால், வருகிற தேர்தலிலும் பழைய நிலைமையே உருவாகும்.
நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.கவின் முகம் அகோரமாக மாறும் வேளையில் அதனை மூடி மறைத்து நாட்டு மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பெங்களூர்,  ஹைதராபாத்,  நந்தத் ஆகிய இடங்களில் முற்றிலும் அப்பாவியான உயர்கல்விப் பின்னணிக் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது படலங்கள் முஸ்லிம் இனப்படுகொலையை நியாயப்படுத்த நடந்த முயற்சியே அன்றி வேறொன்றும் இல்லை.
இரண்டு செய்திகளையும் ஒரே நேரத்தில் மக்களை வாசிக்கச் செய்வதே சங்க்பரிவார்களின் நோக்கமாகும். இதனை ஆறுதலாக  கொலைக்கார கும்பல்களை தாலாட்டி, சீராட்டி வளர்த்தும் பா.ஜ.க கருதுமானால் வரலாற்றில் மேலும் பின்னடைவை அவர்கள் எதிர்பார்க்கலாம்.
எஸ்.எம்.எஸ் வதந்தி உள்பட இந்தியாவில் நிகழும் அசம்பாவிதங்களுக்கு எல்லாம் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பழிசுமத்தி கைது செய்து அப்துல் நாஸர் மஃதனியைப் போல சிறைக் கொட்டகைகளில் அடைக்கும் மோடிக்கும்,  கர்நாடகாவின் பாசிச பாரதீய ஜனதா அரசுக்கும் காங்கிரஸ் கட்சியின் மெளன அனுமதி உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.
முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றமும், பொய்யென நிரூபணமாகும் வேளையிலும், முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என நீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகும் வேளையிலும் இந்தியாவில் நிகழ்ந்த நாசவேலைகளில் சங்க்பரிவார பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமாகிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் தனது ஆண்மைத் தன்மையை நிரூபிக்க முடியவில்லை.
தீஸ்டா ஸெடல்வாட் உள்ளிட்ட மனித உரிமைப் போராளிகளின் நீண்டகால போராட்டத்தின் இறுதியில் கிடைத்த வெற்றியே அஹ்மதாபாத் கூடுதல் முதன்மை நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. அதுமட்டுமல்ல கொடும் பயங்கரவாதியான பாபு பஜ்ரங்கி,  தானே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொன்றொழித்து, கர்ப்பிணி தாயின் வயிற்றைக் கிழித்து சிசுவை திரிசூலத்தால் குத்தி எடுத்து தீயில் பொசுக்கியதை விவரித்த பிறகும், புலனாய்வு குழுக்களின் மேலிட கனவான்கள் சிலரின் தயவால் மோடிக்கு சிறைக்கு வெளியே சுதந்திரமாக நடமாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோத்ராவுக்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டியில் கரசேவகர்களை திட்டமிட்டு தீயில் பொசுக்கிவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள். பின்னர் 2002 பிப்ருவரி 27-ஆம் தேதி நள்ளிரவு கூட்டப்பட்ட உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் மதவெறி தலைக்கு ஏறியதாl மதம் பிடித்த யானையாக மாறிய நரேந்திர மோடி அடுத்து வரும் தினங்களில் ஹிந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்த அவகாசம் வழங்கி முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உண்மையை அம்பலப்படுத்தி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் தாக்கல் செய்தார். பட்டின் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. சஞ்சிவ் பட்டைப் போலவே காலம் கடந்தேனும் விவேக் ஸ்ரீவஸ்தவா, சதீஷ் சர்மா, ஹிமான்ஷு பட் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் குஜராத்தில் யதார்த்தத்தில் என்ன நிகழ்ந்தது என்ற உண்மையை உலகுக்கு அறிவித்தனர்.
இஹ்ஸான் ஜாஃப்ரி என்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி உள்பட 69 முஸ்லிம்கள் தீயிலிட்டு பொசுக்கி கொலைச் செய்யப்பட்ட குல்பர்கா சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கிலும் மோடியின் பங்கினைக் குறித்து மேற்கூறிய போலீஸ் அதிகாரிகள் தங்களது பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை (200 பேர் கொலைச் செய்யப்பட்டதாக ஊர்மக்கள் கூறுகின்றனர்) கசாப்புச் செய்த காட்சியை மோடி நேரடியாக வந்து பார்த்து கொலையாளிகளை பாராட்டியதாக சம்பவத்தை நேரில் கண்ட சுரேஷ் என்பவர் கூறுகிறார்.
பாலியல் வன்புணர்வுக்கு பிறகு இளம் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் மரக்கட்டைகளை செருகியதும், கர்ப்பிணியின் வயிற்றை கிழித்ததும் நரோடா பாட்டியாவில்தான் அரங்கேறியது. மூன்று தினங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று மோடியும், பாபு பஜ்ரங்கியும் நேரடியாகவே அனுமதி அளித்ததாக நேரில் கண்டவர்கள் டெஹல்காவிடம் தெரிவித்தனர்.
மோடியிடம் விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் மோடிக்கு நற்சான்றிதழை வழங்கினார். சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த குஜராத்தைச் சார்ந்த கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, ஆஷிஷ் பாட்டியா ஆகியோர் மோடியின் ஆதரவாளர்கள் ஆவர். இவர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றதே மிகப்பெரிய அநீதமாகும். இந்த மோடியின் பக்தர்கள்தாம் அவரிடம் விசாரணையை நடத்தினார்கள்.
மோடியை குற்றவாளியாக அறிவிப்பதற்கு காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது. மோடி குஜராத்தில் முதல்வராக தொடர்வதையே அவர்கள் விரும்புகின்றார்கள். கடந்த 10 ஆண்டுகளாக மோடியிடம் விசாரணைச் செய்யப்படவில்லை. இதனால் இந்தியாவில் எதுவும் சம்பவித்து விடவில்லை. இதன் மூலம் மோடியை சுட்டிக்காட்டி இதர மாநிலங்களில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கவர்ந்துவிடலாம்
என்பதே காங்கிரஸின் திட்டமாகும். எனவே காங்கிரஸ் கட்சி மோடியை சிறையில் தள்ளும் என எதிர்பார்ப்பது கற்பனை உலகில் சஞ்சரிப்பது போன்றாகும்.
தற்பொழுது மிச்சமிருக்கும் கேள்வி என்னவெனில்  “மோடியின் கரங்களில் விலங்கிட்டு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கடமையை நிறைவேற்றப் போவது யார்?” என்பதாகும்.
அ.செய்யது அலீ.

Sunday 23 September 2012

இவர் தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - கோடானுகோடி மக்கள் இந்த மனிதர் மீது அபரிமிதமான அன்பை பொழிய என்ன காரணம்?, மிக குறுகிய காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த பகுதியையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்திருக்கின்றார் என்றால், அவருடைய போதனைகள் எப்படி இருந்தன?
இம்மாதிரியான கேள்விகளுக்கு, சற்றே சுருக்கமான முறையில் விடை கொடுக்க முயலும் பதிவு தான் இது.
முஸ்லிம்களால் தங்கள் உயிரினினும் மேலாக மதிக்கப்படும் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் அறிந்துக்கொள்ளும் வண்ணம் இந்த பதிவு அமையுமென நம்புகின்றோம் (இறைவன் நாடினால்). 

நபியவர்கள் குறித்து சில வரிகளில்

 மக்கா நகரில் 570-ஆம் ஆண்டு பிறந்தார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள். மக்கா நகர மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். நேர்மையாளராகவும், உண்மையாளராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் அறியப்பட்டவர்கள். ஆனால், நபிகளாரின் நாற்பதாவது வயதில் இந்த காட்சிகள் மாறத்தொடங்கின. இந்த வயதில் தான் இறைச்செய்தியை மக்களுக்கு சொல்லும் நபியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் முஹம்மது (ஸல்).
இறைவன் தன்னை நபியாக தேர்ந்தெடுத்திருக்கின்றான், இறைச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க சொல்லிருக்கின்றான் என்று சொன்னதால் கேலியும், கிண்டலுமே மிஞ்சின. ஆனாலும் இறைச்செய்தியை எடுத்துச்சொல்வதில் பின்வாங்கவில்லை. அழகான முறையில் இஸ்லாத்தை எடுத்துச்சொன்னார்கள். இறைச்செய்தியால் கவரப்பட்ட மக்கள், சிறிது சிறிதாக இஸ்லாத்தின்பால் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். 
தங்களின் மூதாதையர் பின்பற்றிய பாதையிலிருந்து மக்களை திசை திருப்புகின்றார் முஹம்மது (ஸல்) என்று கொந்தளித்தனர் மக்கா நகர அதிகார வர்க்கத்தினர். சமாதானம் பேச சென்றனர். இஸ்லாத்தை எடுத்துக்கூறுவதை முஹம்மது (ஸல்) கைவிடுவாரேயானால், அவருக்கு, பொன் பொருள் அதிகாரம் என்று அனைத்தையும் தருவதாக கூறினர். ஆனால் நபியவர்களோ எளிமையான வார்த்தைகளை பதிலாக கூறினார்கள். 
ஒரு கையில் சூரியனையும், மற்றொரு கையில் சந்திரனையும் கொடுத்து தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்த சொன்னாலும் தன்னால் முடியாது என்ற வார்த்தைகள் தான் அவை. இன்றளவும், இஸ்லாத்தை எடுத்துச்சொல்லும்போது வரக்கூடிய தடங்கல்களையும், சோதனைகளையும் பொருட்படுத்தாது தொடர்ந்து முஸ்லிம்கள் செயல்பட ஊக்கமாய் இருப்பது அந்த எளிமையான, காத்திரமான வார்த்தைகள் தான். 
உலக மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித்தூதரை எதிர்த்தவர்கள், கொன்றொழிக்க வாளேந்தி புறப்பட்டவர்கள் என்று பலரும் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது அந்த பகுதி முழுவதுமே இஸ்லாத்தை தழுவியிருந்தது.
நபியவர்களின், வாழ்வின் பல்வேறு அங்கங்கள் குறித்த சுமார் 25 நபிமொழிகள் இங்கே பகிரப்பட்டுள்ளன. படித்துப்பாருங்கள், இந்த அற்புத மனிதர் குறித்த மேலும் பல தகவல்களை இதன் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். அவை உங்கள் வாழ்விற்கு வழிகாட்டியாக அமையலாம் (இறைவன் நாடினால்). 
**********
1. "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி.

2. ‘கன்னித்தன்மை இழந்த பெண்ணை, அவளுடைய உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! (கன்னிப்பெண் வெட்கப்படுவாளே) எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)' என்று மக்கள் கேட்டார்கள். ‘அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்)' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி.

3. "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள், "இல்லை. மாறாக,  மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணைபுரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள் (அபூதாவூத்).

4. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்".

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.

5.  "உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.

6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதை தான் பார்த்ததில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள். பிடிக்காவிட்டால் அமைதியாக இருந்துவிடுவார்கள்.

அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: முஸ்லிம்.

7. ‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?' என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).
ஆதாரம்: புஹாரி.

8. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).
ஆதாரம்: புகாரி.

9. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).
ஆதாரம்: புஹாரி.

10. (பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபி(ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கின்றார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி).
ஆதாரம்: புகாரி.

11. ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) .
ஆதாரம்: புஹாரி.

12. நபி(ஸல்) அவர்களிடம் ஹிந்த் பின்த்து உத்பா(ரலி) அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

13. “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று மக்கள் கூறினார்கள். ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).
ஆதாரம்: புஹாரி.

14. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஉபா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

15.  "ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) .
நூல்: முஸ்லிம்.

16. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள்)".

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி).
ஆதாரம்: புஹாரி.

17. "(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன்.

அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி).
ஆதாரம்: புஹாரி.

18. "மரணித்த பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் 'நீ என்ன அமல் (செயல்) செய்து கொண்டிருந்தாய்?' என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார், 'நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு - கடனாளிகளுக்கு தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாது வாங்கிக் கொள்வேன்' என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி).
நூல்: முஸ்லிம்.

19. "உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி).
நூல்: புஹாரி.

20. 'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என்று நாங்கள் நபி(ஸல்) அவர்களை வினவினோம். அதற்கு 'ஆம்' என்றார்கள். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் (ரலி).
ஆதாரம்: முஅத்தா.

21. "ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தாய் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)" என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி).
ஆதாரம்: புஹாரி.

22. ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி).
ஆதாரம்: அபூதாவூத்.

23. "ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) சொல்லிக்கொண்டார். உடனே அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

24. "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).
நூல்: புஹாரி.

25. '(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார் அல்லது இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

நூல்: புஹாரி.

**********

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படிக்க, பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும். இமெயில் மூலம் பெற விரும்புபவர்கள் எனக்கு மெயில் அனுப்பவும் (aashiq.ahamed.14@gmail.com). 


நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் நாம் வாழ்ந்திட இறைவன் அருள்புரிவானாக...ஆமீன்.


அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


வார்த்தை சுருக்கங்களுக்கான விளக்கங்கள்:
1. ஸல் - ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் என்பதின் சுருக்கமாகும். இதற்கு "இவர் மீது இறைவனின் அமைதியும், கண்ணியமும் நிலவுவதாக " என்று பொருள்.
2. ரலி - ரலியல்லாஹு அன்ஹு/அன்ஹா என்பதின் சுருக்கமாகும். இதனை, நபியவர்களுடன் இருந்த/கண்களால் பார்த்த முஸ்லிம்களை குறிக்க பயன்படுத்துவார்கள். இதற்கு "இறைவன் இவர்களை பொருந்திக்கொள்வானாக" என்று பொருள். 

Please note:
"இவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)" என்ற தலைப்பில் மேலே உள்ள தனிப்பக்கத்தில், நெகிழ்வூட்டும் நபிமொழிகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.  

My Sincere thanks to: 
6. சகோதரர் ஜாபர் ஸபாமர்வா.
7. சகோதரர் ஜாஹிர் ஹுசைன். 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ

Friday 21 September 2012

அதிசய மனிதர் முஹம்மத் (ஸல்)



محمد அதிசய மனிதர் முஹம்மத் (ஸல்)

 எங்கிருந்து கிடைத்தது அறிவு?
“முஹம்மத் நபி (ஸல்) அவர்களது பிறப்பிற்கு முன்னரே தந்தை மரணித்து விடுகிறார்கள். தாம் கல்வி பெற வேண்டிய வயதில் தாயார் ஆமினாவும் மரணித்து விடுகிறார்கள். இவர்களது வாழ்நாளில் கல்வியறிவூட்டிய ஆசிரியர்களாகவும் எவருமே இருந்ததில்லை. இதனால் இவர்கள் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவர்களாகவே வாழ்ந்தார்கள். அவ்வாறே இவர்களது இறை தூதுத்துவம் 40வது வயதில் கிடைக்கும் வரை சமூகசீர்திருத்தம் குறித்து எவர்களுடனும் பேசிக்கொண்டிருந்ததற்கான ஆதாரங்களை எவராலும் எங்கு தேடியும் துளியும் பெறமுடியாது; மாறாக இக்கருத்துக்கு எதிரான ஆதாரங்களையே சேகரிக்க முடிகிறது. ஆக அறிவு புகட்ட மாதா, பிதா, குரு என்ற யாரும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்ததில்லை. வாசித்தறியும் ஆற்றலுமிருந்ததில்லை கேள்வி ஞானமும் இருந்ததில்லை.”
முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றிய இக்கூற்றுக்கள் இன்றைய அனைத்து வரலாற்று ஆய்வாளர்களாலும் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும். பகிரங்கமாக எதிர்ப்பவர்களும் கூட இதற்கெதிரான தமது வாதங்களை நிறுவ முடியாது மௌனிக்கவே செய்கின்றனர். இவைகளை உறுதிப்படுத்த பலமான ஆதாரங்கள் உள்ளதே இவற்றுக்கு காரணமாகும். அவைகளிலொன்று ; முதலில் கடுமையாக எதிர்த்து நின்ற அன்றைய மக்களுக்கு மத்தியிலேயே முஹம்மத்(ஸல்)அவர்களை எழுத வாசிகத் தெரியாதவர், எதுவுமே அறிந்திராத “உம்மி” என திருக்குர்ஆன் அடையாளப்படுத்தி இருந்தது
“அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (29:48)”
(நபியே!) நீர் கூறுவீராக “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை – அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் – ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியாத நபியாகிய அவன் தூதரின் மீதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் – அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.”(7:158)(இன்னும்-11:49/7:158/62:2/4:164)
இவ் இறை வசனங்களில் சிறிதளவும் சந்தேகமில்லாதிருந்த காரணத்தினாலேயே இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் முஹம்மத்(ஸல்)அவர்களது வாழ்நாளிலேயே இறைத்தூதராக அவர்களை அங்கீகரித்தார்கள். அவர்களுக்காக இவ்வுலக செல்வ சுகங்களையெல்லாம் துறக்கும் துணிவையும் பெற்றார்கள். எதிர் கருத்துக்கொண்டவர்களது விதண்டாவாதத்தை தகர்த்தெறிய இவ்வாதாரம் ஒன்றே போதும் என கருதுகிறேன்.
அல்லாஹ் அத்தாட்சிப்படுத்தியுள்ள முஹம்மத்(ஸல்) அவர்களது வாழ்வை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பல கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டியுள்ளது.
பாலைவனத்தில் வாழ்ந்த படிப்பறிவே இல்லாத சாதாரண மனிதரால் எவ்வாறு இன்றைய நவீன உலகம் வியக்கும் திருக்குர்ஆனைத் தர முடிந்தது?
இன்றைய விஞ்ஞானம் மெய்பித்து நிற்கும் உண்மைகளை ஆறாம் நூற்றாண்டில் இவர்களால் எவ்வாறு துல்லியமாக கூற முடிந்தது?
எவ்வாறு இவர்களால் முன்னைய வேதங்களையும் வரலாறுகளையும் கச்சிதமாகவும் அவைகளை விட விரிவாகவும் கூற முடிந்தது?
அண்ட பால் மண்டலங்களின் ஒழுங்குகளைப் பற்றியும், முள்ளந்தண்டிலிருந்து உருவாகும் விந்தணு பற்றியும், பசும் மரத்திலிருந்து இறைவன் தீயை உண்டாக்கினான் என்றும் எவ்வாறு இவர்களால் கூற முடிந்தது?
இவ்வாறு சிக்கலான விடயங்களையெல்லம் கூறியதுடன் நில்லாது; இவைகளனைத்தும் இறைவனது வசனங்களேயன்றி வேறில்லை முடிந்தால் பொய்ப்பித்துக் காட்டுமாறு எவ்வாறு இவர்களால் சவால் விட முடிந்தது?
எவ்வாறு இவர்களால் இன்றைய உலகில் நிரூபிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள முன்னறிவிப்புகளையெல்லாம் கூற முடிந்தது?
எவ்வாறு இவர்களால் பெரும்சட்ட வல்லுனராக முடிந்தது?
எவ்வாறு இவர்களால் பெரும் சாம்ராஜ்யத்தையே நிர்வகிக்கவும் வழிகாட்டவும் முடிந்தது?
எவ்வாறு இவர்களால் உன்னத பொருளியல் கோட்பாடுகளை கூற முடிந்தது?
எவ்வாறு இவர்களால் முழு மனித வாழ்க்கைக்குமே வழிகாட்ட முடிந்தது?
மொத்தத்தில் மனித உள்ளங்களை எவ்வாறு இவர்களால் பக்குவபடுத்த முடிந்தது?

அல்ஹம்துலில்லாஹ்(எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கேயுரியது). இக்கேள்விகளைப் போன்ற இன்னும் அனைத்து கேள்விகளுக்கும் முஃமீன்களினது பதில் “வணங்கத்தகுந்த நாயன் அல்லாஹ்வேயன்றி வேறில்லை; அவனது திருத்தூதரே முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்பதாகும்.
“உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா? (குர்ஆன்-21:10)”

ஆலோசனைகளை வழங்கியது யார்?
“மனிதனானவன் அடுத்த மனிதனை ஏதாவது ஒரு விதத்தில் சார்ந்திருக்கவே வேண்டும்” என்பதே இறை நியதி. அவனே உலகின் தனிப்பெரும் அறிவாளியாக இருந்தாலும் சரியே அவன் அறியாத அடுத்த துறையும் இருக்கவே செய்யும். அப்பெரும் அறிவாளி அடுத்த துறையினுள் நுழையும் போது அத்துறை சார்ந்தவனை துணைக்கழைக்கவே வேண்டும். இதுவே இன்றைய தினம் வரை வரலாறு தரும் பாடமும், இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதியுமாகும்.
“பொருளாதார மேதைக்கு நிர்வாகங்கள் பற்றி தெரிந்திருப்பதில்லை, இராணுவ மேதைக்கு அரசியல் தெரிந்திருப்பதில்லை. ஏன் உயிரியல் விஞ்ஞானிகளுக்கு பௌதீகவியல் விஞ்ஞானம் தெரிந்திருப்பதில்லை.”
உலகில் வாழ்ந்து சென்ற அனைவரும் இவ்வாறு அடுத்தவர்களின் துணையின் அவசியத்துடன் வாழ்ந்தவர்களே. ஆனால் மனித சரித்திரத்தில் ஒருவரைத் தவிர; அவர்கள்தான் மனிதர்களது ஒவ்வொரு வினாடிஅசைவுக்கும் வழிகாட்டிச்சென்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகும்.
இத்தனைக்கும் இவர்கள் சாதாரணமான ஆன்மீகவாதி மட்டுமல்ல.
அன்றைய பெரும் வல்லரசான உரோம சாம்ராஜ்யத்துக்கு நிகராக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தலைமைதாங்கி வழி நடாத்திய அரசியல் தலைவர்.
தமது மக்களுக்காக களமிறங்கி காவல் புரிந்த மாபெரும் இராணுவத்தளபதி.
நூற்றாண்டுகள் பல கடந்து இன்றும் நிலைத்து நிற்கும் சட்டங்களை இயற்றியவர்.
இன்றும் போற்றப்படும் பொருளியல் கோட்பாடுகளை உலகிற்கு தந்தவர்.
இன்னும் உலகின் அனைத்து துறைகளையும் அசாதாரணமாக அலசியவர்.
உலகின் இன்றைய முதன்மை துறைகளையெல்லாம் இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்த அதிசய மனிதர்.
இவ்வாறு அல்லாஹ் அத்தாட்சிப்படுத்தியுள்ள முஹம்மத்(ஸல்) அவர்களது சாதனைகளை ஆதாரமாகக் கொண்டு இன்னும் பல கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டியுள்ளது.
இன்றைய நூற்றாண்டின் உலகின் பாதிப்பேர்களினது வாழ்வுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து சென்றுள்ள, வாழ்வுக்கான வரையறைகளை காட்டி சென்றுள்ள முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஆலோசனைகள் கொடுத்தவர்கள் யார்?
அன்றைய உலகின் தனிப்பெரும் வல்லரசான ரோம சாம்ராஜ்யமே ஆட்டங்காணுமளவு ஆட்சிநடத்திய இவர்களுக்கு ஆலோசனைகள் கொடுத்தவர்கள் யார்?
அன்றைய உலகில் மட்டுமல்ல கடந்த நூற்றாண்டு வரை எழுச்சியுற்றிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்திற்கான கரு எங்கிருந்து எடுக்கப்பட்டது?
மேலும் இவர்களுக்கு நவீன விஞ்ஞான உலகாலும் பொய்ப்பிக்க முடியாத விஞ்ஞான ஆலோசனைகள் வழங்கியது யார்?
மேலும் பொருளியல் ஆலோசனைகளை வழங்கியது யார்?
மேலும் இராணுவ ஆலோசனைகளை வழங்கியது யார்?

“முஹம்மத்(ஸல்) அவர்களது ஆலோசனைகள் உலக மக்களில் பாதியளவானோருக்கு இன்று அவசியமாகின்ற நிலையில், இவ்வளவு சாதனைகளையும் புரிந்தவருக்கு எந்த துறையிலும் எந்த மனிதரது ஆலோசனைகளும் தேவைப்பட்டிருக்கவில்லையே.”
அல்ஹம்துலில்லாஹ்(எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கேயுரியது). இக்கேள்விகளைப் போன்ற இன்னும் அனைத்து கேள்விகளுக்கும் முஃமீன்களினது பதில் “வணங்கத்தகுந்த நாயன் அல்லாஹ்வேயன்றி வேறில்லை; அவனது திருத்தூதரே முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்பதாகும்.
(நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று நிராகரிப்பவர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்” என்று நீர் கூறிவிடுவீராக! (குர்ஆன்-13:43)

வியப்புடன் நோக்கும் உலக பெரு மேதைகள்.
மகாத்மா காந்தி
“மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல.”
["Mahatma Gandhi- Young India, quated in The light, for 16th September 1924.]

அல்போன்சு டி லாமார்ட்டின்.
“உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் “முகம்மத்” உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.”
[Alphonse de Lamartine, HISTOIRE DE LA TURQUIE, Paris, 1854, Vol. II, pp 276-277.]

எம் எச் ஹார்ட்.
“உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.
இன்னும் அவர் ஒரு சிறந்த இராஜ தந்திரியாகவும் வணிகராகவும் தத்துவவியலாளராகவும் பேச்சாளராகவும் அரச தலைவராகவும் சீர்திருத்த வாதியாகவும் மற்றும் இராணுவத்தளபதியாகவும் கூட வெற்றியடந்துள்ளார்.”
[Michael H. Hart, The 100: A Ranking of the Most Influential Persons in History, New York, 1978, pp. 33

போஸ்வர்த் ஸ்மித்
"அவர் ஒரே நேரத்தில் போப்பும் சீசரும் ஆவார்; ஆனால் அவர் போப்பின் பகட்டுகள் ஆடம்பரங்கள் எதுவுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுகாப்பு படைகள் எதுவுமில்லாத சீசராவார். தயார் நிலையிலுள்ள இராணுவமோ நிலையான நிர்ணயமான வருமானமோ இல்லாமல் வெறும் இறைவனின் இசைவாணையை தெய்வீக அனுமதியை மட்டுமே துணையாக கொண்டு ஆட்சி புரிந்ததாக கூறிக்கொள்ளும் உரிமை மனித வரலாற்றில் எவராவது ஒருவருக்கு இருக்குமானால் அவர் முஹம்மத் ஸல் அவர்களேயாவார். ஏனெனில் ஆட்சி அதிகாரம செலுத்திட தேவையான கருவிகள் துணைச்சாதனங்கள் எதுவுமில்லாமலேயே அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்."
[R.Bosworth Smith- Mohammad and mohammadanism, London 1874, P-92]

வில்லியம் எம். வாட்.
“முஹம்மத்(ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு அவர்களைத் தமது தலைவராக கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்க பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்துமே அவர்களின் அடிப்படையான நேர்மையை நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது இன்னும் பல பிரச்சனைகளையும் கேள்விகளையும் எழுப்புகிறதே தவிர பிரச்சனைகள் தீர்க்கக்கூடியதாக இல்லை. மேலும் உலக வரலாற்றில் மேற்குலகில் முஹம்மதைப்போல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை”
[Pro.William Montgomery Watt, Muhammad at Mecca, Oxford 1953, P.52]

எட்வர்ட் கிப்பன்.
“அவர் தமது மார்க்கத்தை பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல. மாறாக என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடித்தளித்த இஸ்லாத்தின் அதே அசல் வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமால் பன்னிரெண்டு நூற்றாண்டுகளாக நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்கு பிறகும் இன்று வரை இந்திய ஆபிரிக்க துருக்கிய பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சமயத்தைக்குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து இஸ்லாமியர்கள் ஒதுங்கியே இருந்தனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.
இறைவன் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்கு புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் சட்டங்களின் அளவுக்கு குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர் மதிப்புகள் மனிதர் அந்தஸ்த்தை தாண்டி உயர்த்தியதில்லை.”
[Edward Gibbon and Simon Ockley, History of the Saracen Empire, London, 1870, P.54.]

தோமஸ் கார்லைல்.
“சண்டையும், சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து; ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த; பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ?”
[Thomas Carlyle - "Heroes and Hero Worship"]

அன்னி பீசன்ட்.
“அரேபியாவின் இந்தத்தூதருடைய வாழ்க்கையையும் ஒழுக்கப் பண்புகளையும் தூய நடத்தைகளையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத்தூதர்களில் ஒருவரான இறுதித்தூத ரை க் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும் எனது இந்த நூலில் நான் பல ருக்கும் தெரிந்த பல விடயங்களையே சொல்லியிருக்கிறேன். என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை த் திரும்ப த்திரும்ப படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது மதிப்பும் புதிய மரியாதை உணர்வும் ஏற்படுவதைக் காண்கிறேன்.”

நன்றி http://ipcblogger.net/mjabir/?cat=2142&paged=2

Tuesday 18 September 2012

ஷைத்தானிய சக்திகளுக்கு மத்தியில் ஈமானியப் போராட்டம்

ஷைத்தானிய சக்திகளுக்கு மத்தியில் ஈமானியப் போராட்டம்

ஷைத்தானின் ஊசலாட்டங்களும் அதை விட்டும் தவிர்ந்துக் கொள்வதற்கான வழிமுறைகளும்!

மனித குலத்தின் மாபெரும் விரோதியான ஷைத்தான், மனிதர்களை வழிகெடுத்து அவர்களை அழிவின்பால் இட்டுச்சென்று இறுதியில் நரகில் சேர்க்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றான்​. இதற்காக இறைவனிடமே அவன் சவால் விட்டு வந்திருப்பதை அல்-குர்ஆன் நமக்கு எச்சரிக்கின்றது.

“(அதற்கு இப்லீஸ்) ‘நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்’ என்று கூறினான். ‘பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்¢ ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காண மாட்டாய்’ (என்றும் கூறினான்). அதற்கு இறைவன், ‘நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு – அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்’ என்று கூறினான்” (அல்-குர்ஆன் 7:16-18)

மனிதர்களின் எண்ணங்களில் வீணான சந்தேகங்களை உருவாக்கி அவர்களை வழிகெடுப்பதுவும் மனித குலத்தின் எதிரியான ஷைத்தானின் ஒரு வழியாகும். நபி (ஸல்) அவர்கள், இதுபோன்ற விஷயங்களில் நம்மை எச்சரித்திருக்கிறார்கள்.

“ஷைத்தான் உங்களில் ஒருவரிடம் வந்து, இவற்றை யார் படைத்தது, இவற்றை யார் படைத்தது என்று கேட்டு, உன்னுடைய இறைவனை யார் படைத்தது என்று கேட்பான். இது போன்று ஒருவருக்கு நிகழ்ந்தால், அவர் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடி, அது போன்ற எண்ணங்களை விட்டுவிட வேண்டும்” (ஆதாரம் : புகாரி)

மேலும் இது போன்ற சந்தர்ப்பத்தில், நபி (ஸல்) அவர்கள், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளாவன:

1. அல்லாஹ்விடம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டவராக அவனிடமே பாதுகாவல் தேடவேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 7:200)

2. எந்த விஷயத்தில் இத்தகைய ஷைத்தானிய ஊசலாட்டம் ஏற்பட்டதோ, அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அதிலிருந்து விடுபட்டு, மற்ற பயனுள்ள விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து தங்களுக்கு வீணான சந்தேகங்களும் ஊசாலாட்டங்களும் ஏற்பட்டு அதனால் தாம் அவதியுறுவதாக கூறியிருக்கிறார்கள்.

சில நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘எங்களின் இதயங்களில் நாங்கள் யாரும் துணிந்து கூற இயலாத அளவிற்கு சில எண்ணங்களை நாங்கள் காண்கிறோம்’ என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உண்மையில் அதை நீங்கள் கண்டீர்களா என்று கேட்டார்கள். அதற்கு அவாகள் (நபித்தோழர்கள்) ஆம் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘அது தான் உண்மையான இறை நம்பிக்கையாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

இறை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் தான் ஷைத்தான் அதிகமாக வீணான சந்தேகங்களையும் ஊசலாட்டங்களையும் ஏற்படுத்துவான். இறை நிராகரிப்பவர்களைப் பொறுத்தவரையில், அவர்களிடம் ஊசலாட்டங்களை ஏற்படுத்துவதோடல்லாமல், அவர்களை தன் விருப்பம் போல் ஆட்டுவிக்கவும் செய்கின்றான்.

“அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள். எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை – ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான். “ (அல்-குர்ஆன் 34:20-21)

மனித குலத்தின் விரோதியான ஷைத்தான் மக்களை வழிகெடுத்து அவர்களுடைய எண்ணங்களில் சந்தேகத்தை உண்டாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றான். அவனை வெற்றி கொள்ள வேண்டுமெனில், அல்லாஹ்வுடைய உதவியைத் தேடி, ஷைத்தானைப் பற்றி அதிகமாக தெரிந்து அவனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான ஆயுதங்களையும் நாம் தயார்செய்து கொள்ளவேண்டும்.

ஷைத்தானை வெற்றிக் கொள்ளத் தேவையான ஆயுதங்கள்:

1. அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தந்த வழிமுறையைப் பின்பற்றுதல் மேலும் தவறான வழிமுறைகளில் இருந்து தவிர்ந்துக் கொள்ளுதல்:

ஒவ்வொரு புறத்திலிருந்தும் ஷைத்தான் மக்களை அழைக்கின்றான். ஆகையால் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த சட்டங்களை கடைபிடித்து, அவன் தடுத்துள்ளவைகளை விட்டும் தவிர்ந்துக்கொள்ள வேண்டும்.

“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்” (அல்-குர்ஆன் 2:208)

2. ஒருவர் அல்-குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும் முறையே பின்பற்றினால் அவர் ஷைத்தானை விரட்டி அடித்து அவனை கோபமுண்டாக்கிவிடலாம்:

அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“ஆதமுடைய மகன் குர்ஆனில் ஒரு வசனத்தை ஓதி ஸஜ்தா செய்யும் போது, ஷைத்தான் அங்கிருந்து விலகி அழுதுகொண்டு செல்கின்றான். ஆதமுடைய மகனுக்கு ஸஜ்தா செய்ய கட்டளை இடப்பட்டால் அவன் செய்கின்றான். ஆகையால் அவனுக்கு சொர்க்கம்; எனக்கு கட்டளையிடப்பட்டபோது நான் நிராகரித்தேன்; எனக்கு நரகம் தான்! நாசமுண்டாகட்டும்” (ஆதாரம் : முஸ்லிம்)

3. பின்வரும் ஒரு சில சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் எப்படி பாதுகாப்புத் தேடுவது என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகின்றது:

கழிவறையில் நுழையும் போது: ‘அல்லாஹூம்ம இன்னீ அவூதுபிக்க மினல் குப்தி வல் கபாயித்’

பொருள் : ”ஆண் பெண் ஷைத்தானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்’

கோபமாக இருக்கும் போது: ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ராஜீம்’

பொருள் : ‘விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன்’

உடலுறவின் போது: ‘பிஸ்மில்லாஹ் அல்லாஹூம்ம ஜன்னிப்னல் ஷைத்தான் வ ஜன்னிப்னல் ஷைத்தான மா ரஜக்தனா’

பொருள் : ‘இறைவா! ஷைத்தானை விட்டும் எங்களை தூரமாக்கி வைப்பாயாக! எங்களுக்கு அருளப்போகும் சந்ததியையும் ஷைத்தானை விட்டும் தூரமாக்கி வைப்பாயாக!’

கழுதை கத்தும் போது: ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ராஜீம்’

பொருள் : ‘விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகின்றேன்’

குர்ஆனை ஓத ஆரம்பிக்கும் போது: ‘அவூதுபில்லாஹில் ஸமீவுல் அளீம் மினஷ்ஷைத்தானிர்ரஜீம்’

பொருள் : ‘எல்லாற்றையும் கேட்பவனாகிய மகத்தான அல்லாஹ்விடத்தில், ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்’

4. இறைவனை திக்ர் செய்துகொண்டே இருத்தல்:

இறைவனுடைய நினைவு ஒரு மனிதனை பாதுகாக்கும்.

5. முஸ்லிம் ஜமாஅத்தில் இணைந்து, இஸ்லாமிய ஆட்சி செய்யும் பூமியில் வாழ்ந்து, நலவானவற்றில் உதவி செய்யும் நண்பர்களை தேர்வு செய்யவேண்டும்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யாரெல்லாம் சொர்க்கத்தின் உயரிய நிலையை அடைய விரும்புகிறார்களோ, அவர்கள் முஸ்லிம் ஜமாஅத்தோடு இணைந்துக் கொள்ளட்டும். ஏனெனில் தனி ஒருவராக இருப்பவரிடம் ஷைத்தான் இருக்கிறான். இருவராக இருக்கும் போது அவரைவிட்டும் தூரமாகிவிடுகின்றான்” (ஆதாரம் : திர்மிதி)

6. “நல்லவர்களாக நம்மிடம் வந்து நமக்கு நேர்மையான அறிவுரை கூறுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நல்லவர்களாக இருந்திருந்திருந்தால் தனக்குத்தானே நன்மை செய்துகொண்டிருக்கமுடியும்! அவ்வாறில்லாமல், அவன் தனக்குத்தானே அநியாயம் செய்துகொண்டவனாகிவிட்டான். நீங்கள் தொழுதுகொண்டிருக்கும்போது தொழுகையை சுருக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினால், நீங்கள் தொழுகையை நீளமாக்கிக்கொள்ளுங்கள்! உங்கள் உளூ முறிந்துவிட்டது என்று கூறினால், ‘நீ பொய்யன் என்று கூறுங்கள். இறந்தவர்களுக்கு கேட்கச் செய்யவும் நன்மை மற்றும் தீமைச் செய்யமுடியும் என்று என்று கூறினால் ‘நீ பொய்யன் என்று கூறுங்கள். நீங்கள் சாப்பிடும் போது அவனுக்கு மாற்றமாக வலது கையால் உண்ணுங்கள்” (ஆதாரம் : ஸஹீஹூல் ஜாமிவு 4/47)

“நீங்கள் சாப்பிடும் போது ஒரு பருக்கை கீழே விழுந்துவிட்டால் அதை எடுத்துக்கொள்ளுங்கள்! ஷைத்தானுக்காக அதை விட்டுவிடாதீர்கள்” (ஆதாரம் :முஸ்லிம்)

7. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுதல் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஷைத்தான் இறைவனிடம் உன்னுடைய அடியார்களை அவர்கள் உயிருடன் உள்ளவரை வழிகெடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்று கூறினார். இறைவன், ‘அவர்கள் என்னிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கும் வரை என்னுடைய கருணையினால் மன்னித்துக் கொண்டே இருப்பேன்’ என்று கூறினான். (ஆதாரம் : அஹ்மத்)

ஆகையால் நாம் அல்லாஹ்விடமே திரும்பி பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நமது தந்தை ஆதம் (அலை) அவர்களிடம் அழகிய படிப்பினை உள்ளது. ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம்,

‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’ என்று கூறினார்கள். (அல்-குர்ஆன் 7:23)
By: Cuddalore MuslimFriends